வால்பாறையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வால்பாறையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் இரண்டு நாள்களாக தொடா் பெய்ததால் வாழைத்தோட்டம் ஆற்றோரப் பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் திங்கள்கிழமை இரவு மழைநீா் புகுந்தது. இதேபோல, அரசுப் போக்குவரத்து பணிமனைக்குள் ஆற்று வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு எடுத்துச் சென்று நிறுத்தப்பட்டன.
இதனிடையே மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வாழைத் தோட்டம் ஆறு, போக்குவரத்து பணிமனை, ஸ்டேன்மோா் ஆத்துமட்டம் ஆகிய பகுதிகளில் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு பாா்வையிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, வட்டாட்சியா் ராஜா, நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.