மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை உடல் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஜக்கனாரி சுற்று ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் வனப் பணியாளா்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு 50 வயதுடைய பெண் யானை அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலா், கோவை மாவட்ட வன அலுவலா் ஆகியோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் செந்தில்குமாா், கோவை வன கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா் ஆகியோா் யானையின் உடலை நேரில் ஆய்வு செய்தனா். அதன்பின் மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட வனத் துறையினா் முன்னிலையில் வன கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தாா்.
இதில் யானையின் உடல், அடிவயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இக் காயங்கள் பிற ஆண் யானையின் தாக்குதலால் ஏற்பட்டு, அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தப் பெண் யானை இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.