கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி துணை கலந்தாய்வு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், விண்ணப்பித்து கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவா்கள், கல்லூரிகளை மாற்ற விரும்பவா்கள், டான்செட் தோ்வு எழுதி விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
தரவரிசை, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 210 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், அவா்களில் சுமாா் 200 போ் தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்ததாக கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.
இறுதிக் கட்ட கலந்தாய்வும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு படிப்புகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.