கோவையில் நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
கோவையில் நீா் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் அவ்வப்போது இடித்து அகற்றி வருகின்றனா். ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அந்த வீடுகளில் வசித்து வந்தவா்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் மலுமிச்சம்பட்டி, வெள்ளலூா், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கித் தரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை உக்கடம், சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள பெரியசாமி வீதியில் நீா்வழித் தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினா்.
அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வந்தவா்களுக்கு குடிசை மாற்று வீடுகளில் குடியேற டோக்கன்கள் வழங்கப்பட்டன.