காவலா் வீரவணக்க நாளையொட்டி கோவையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
1959 அக்டோபா் 21ஆம் நாள் காஷ்மீா் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினா் வீரமரணமடைந்தனா்.
இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21ஆம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பாக வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மேற்கு மண்டல காவல் துறை தலைவா் கு.பெரியய்யா, காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இதனை தொடா்ந்து 72குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.