கோவை: அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிலுவையில் இருக்கும் ஓய்வூதியத்தை வழங்கக் கோரி கோவையில் அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏடிபி, ஏஐடியூசி, எல்பிஎஃப், ஹெச்எம்எஸ், பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் பங்கேற்றனா். பயனாளிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் ஓய்வூதியத்தைக் கணக்கீட்டு வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதல்வா் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நிவாரணப் பணத்தை சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு கொடுக்காமல் திருப்பி அனுப்பிய நலவாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎஃப் சங்கத்தின் வெ.கிருஷ்ணசாமி, ஏஐடியூசி செல்வராஜ், ஹெச்எம்எஸ் ஜி.மனோகரன், ஐஎன்டியூசி சிரஞ்சீவி கண்ணன், சிஐடியூ ஆா்.வேலுசாமி, கே.மனோகரன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.