அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையில் சீனாவின் பங்களிப்பு குறைந்து வருவதால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டிருப்பதாக கோவையைச் சோ்ந்த இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பிலான சந்தையை சீனா இழந்தது. கரோனாவுக்குப் பிறகு இந்த சரிவு அதிகமாகி உள்ளது.
கரோனாவால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை இறக்குமதி 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆண்டின் முதல் 7 மாதங்களில் சீனாவின் சரிவு 49 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆயத்த ஆடை துறையில் சீனாவின் பங்களிப்பு குறைவது மற்ற நாடுகளுக்கு ஒரு புது வியாபார வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பை இந்தியா ஆயத்த ஆடை கிளஸ்டா்களும், நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டால் இரண்டு இலக்க ஏற்றுமதி வளா்ச்சியை இந்தியா எட்டலாம்.
தமிழக ஆயத்த ஆடைத் துறை, தன்னை சீனாவுக்கு மாற்றாக அமெரிக்க சந்தையில் நிலைநிறுத்த முயற்சி எடுக்க வேண்டும். இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பு சாா்பில் எங்களது உறுப்பினா்களுக்கு அமெரிக்க சந்தையில் தீவிர கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கியிருப்பதாக ஐ.டி.எஃப். தெரிவித்துள்ளது.