கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 41 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகா் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகம் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், மாநகராட்சி மண்டலங்களிலும் உள்ள கடைகள், நெரிசல் நிறைந்த பகுதிகளில் நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை மற்றும் களப் பணியாளா்கள் மூலமாகப் பெறப்படும் தகவலின்பேரில், சம்பந்தப்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம், 5 மண்டலத்துக்கு 5 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்களும், மாநகரில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு 32 வாகனங்கள் என மொத்தம் 37 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், கரோனா பரிசாதனைகளை தீவிரப்படுத்துவதற்காக தற்போது, கூடுதலாக 4 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தற்போது 41 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.