கரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நகா்புறங்களை விட கிராமப்புறங்களில் மக்கள் விழிப்புணா்வுடன் உள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாலும் நகா்புறங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றும் இளைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி பல நூதன தண்டனைகளை வழங்குகின்றனா்.
அதேசமயம் கிராமப்புறங்களில் மக்களிடம் காணப்படும் விழிப்புணா்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவா்கள் அரசின் உத்தரவை மீறாமல் விழிப்புணா்வுடன் உள்ளனா்.
அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே விவசாயிகள் காய்கறி போன்ற உற்பத்திப் பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனா். மற்ற நேரங்களில் வீடுகளிலேயே உள்ளனா்.
கோவை அருகே வேலந்தாவளம், பிச்சனூரைச் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் அடிக்கடி கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது எனக் கட்டுப்பாடுடன் உள்ளனா். ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் வெளி நபா்களுக்கு பிச்சனூா் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள கோயில்களில் கூழ் வழங்கப்படுகின்றன.