அன்னூா் அருகே சூறாவளிக் காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
By DIN | Published On : 26th April 2020 10:09 PM | Last Updated : 26th April 2020 10:09 PM | அ+அ அ- |

சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்கள்.
கோவை மாவட்டம், அன்னூா் அருகே ஆம்போதி, அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சிகளில் சனிக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
அன்னூா் ஒன்றியம் ஆம்போதி, அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பச்சாக்கவுண்டனூா், லக்கேபாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு சூறாவளிக் காற்று வீசியது.
இதில் 20 ஆயிரம் நேந்திரன் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. முறிந்த மரங்களில் இருந்த வாழைக் காய்கள் ஒரு மாதத்தில் விற்பனைக்காக வெட்டப்படுவதாக இருந்தது.
சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு சுமாா் ரூ.40 லட்சம் இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.