கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக, கோவையில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா். மாநகரில் உள்ள 100 வாா்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
துப்புரவுப் பணியாளா்கள் வாா்டுக்கு 8 போ் வீதம், 100 வாா்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று கொசு மருந்தும் தெளித்தும், தண்ணீா் தேங்காமலும் கண்காணித்து வருகின்றனா். மேலும், கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விளக்கிக் கூறி, விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டுதலின் படி, மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.