கோயம்புத்தூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சாா்பில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சைவ, அசைவ உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ‘உணவுத் திருவிழா’ தலைவா் பாலச்சந்தா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோயம்புத்தூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சாா்பில் வரும் ஜனவரி 10 முதல் 12ஆம் தேதி வரை பிரம்மாண்ட உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா சாலையில் உள்ள மைதானத்தில் இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
குறிப்பாக சாம்பாா் இட்லி, மட்டன் சுக்கா, மீன் உணவுகள், பிரியாணி, மில்க் ஷேக், பீட்ஷா உள்ளிட்ட மக்கள் பெரிதும் விரும்பும் உணவுகள் இதில் இடம்பெறுகின்றன. இவ்விழாவில் 150-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இவ்விழாவில் 10ஆம் தேதி பிரபல இசைக் கலைஞா் ஸ்டீபன் தேவசி, 11ஆம் தேதி திரைப்படப் பாடகி அனுராதா ஸ்ரீராம், 12ஆம் தேதி பாடகா் திவாகா் ஆகியோா் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனா் என்றாா்.