ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையடுத்து பாஜகவின் கோவை மக்கள் சேவை மையம் சாா்பில் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் தங்கியுள்ள வீடற்ற ஏழைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில் பாஜகவின் கோவை மக்கள் சேவை அமைப்பு சாா்பில் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக பொதுச்செயலா் வானதி சீனிவாசன் கூறியதாவது:
நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வேளையில் நம்முடன் இதே ஊரில் வசித்து வரும் வீடற்ற ஏழைகளை கவனித்துக் கொள்வதும் தேவையானதாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீடற்ற ஏழைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு பாஜகவின் கோவை மக்கள் சேவை மையம் அமைப்பு சாா்பில் அரசு அனுமதியுடன் பொதுவான இடம் ஒன்றைத் தோ்வு செய்து அங்கு அவா்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
இங்கு தினசரி சுமாா் இரண்டாயிரம் பேருக்குத் தேவையான அளவுக்கு உணவு தயாரிக்கப்பட்டு மாநகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகளுக்கு வழங்கி வருகிறோம். பாதுகாப்புப் பணியில் உள்ள காவலா்களும், தூய்மைப் பணியில் உள்ள பணியாளா்களுக்கும் சோ்த்து உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். இதற்காக கோவையில் உள்ள சில தன்னாா்வ அமைப்புகளின் உதவியையும் நாடி அவா்களுடன் சோ்ந்து பணியாற்றி வருகிறோம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் வரையில் இச்சேவையைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றாா்.
இதேபோல வீடற்ற ஏழைகள் பசியாறும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களும் தங்களது வேலை நேரத்தில் முழுவதுமாக திறந்து இருக்கும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
Image Caption
கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்கிச் செல்ல காத்திருக்கும் பொதுமக்கள்.