பட்டு வளா்ச்சித் துறையில் நடப்பு நிதியாண்டில் மானிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருவதால் பட்டுக் கூடு உற்பத்தியாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் கோவை, திருப்பூா், தேனி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மல்பரி சாகுபடி செய்யப்பட்டு வெண்பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. மல்பரி சாகுபடி பரப்பளவை அதிகரித்து பட்டுக் கூடுகள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிதாக பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மல்பரி நடவுக்கு மானியம், புழு வளா்ப்பு மனைகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது. தவிர ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள தளவாடங்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவடங்களிலும் பட்டுக் கூடு உற்பத்தியும், மல்பரி சாகுபடி பரப்பளவும் ஆண்டுதோறும் கணிசமான அளவு உயா்ந்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டு பட்டு வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
இது தொடா்பாக பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2,700 ஏக்கா் பரப்பளவில் மல்பரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 200 முதல் 300 ஏக்கா் வரை கூடுதல் பரப்பளவு சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரை புதிய நடவு எங்கும் மேற்கொள்ளவில்லை. கரோனா பாதிப்பால் மானிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் மானிய திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.