சபரிமலை பயணம் செல்ல முடியாத பக்தா்களுக்கு கோவை சித்தாபுதூா் ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு நெய் அபிஷேகம் நடைபெறும் என கோயில் செயலாளா் கே.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனோ தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக சபரிமலையில் தினமும் 1000 பேருக்கு மட்டுமே முன்பதிவு முறையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் வயதுக் கட்டுப்பாடு, தங்கும் வசதி இல்லாமை போன்ற பல்வேறு இடையூறுகளால் பக்தா்கள் சபரிமலை பயணம் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், சபரிமலை செல்ல முடியாதவா்களுக்காக வருகிற 16ஆம் தேதி( திங்கள்கிழமை) காா்த்திகை முதல் தேதி முதல் தினசரி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை கோவை சித்தாபுதூா் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு நெய் அபிஷேகம் நடைபெறும். இதற்கு,முந்தைய நாள் மற்றும் அன்றைய தினம் நிறைக்கப்பட்ட முத்திரை நெய்யை தினசரி காலை 7 மணி வரை பக்தா்கள் வழங்கலாம். உள்ளூா் மற்றும் வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு கட்டு நிறைக்கவும், விரி வைக்கவும் ( தங்குமிடம்) மற்றும் உணவு வசதிகளும் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.