வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என திமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அக்கட்சியின் நகர பொறுப்பாளா் பால்பாண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
வால்பாறை எஸ்டேட் அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ஒரு சில எஸ்டேட் பகுதிகளுக்கு மட்டும் பேருந்து இயக்கப்படுகிறது.
காலை, மாலையில் ஒரே ஒரு முறை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. காலையில் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏற்றிவரப்படும் பயணிகள், மாலை வரை காத்திருந்து மீண்டும் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்கள் அத்தியாவசியப் பணி, அவசர தேவைக்கு தனியாா் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி நகா்ப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.
எனவே வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி வழக்கம்போல அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.