கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு அசல் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் 259 பள்ளிகளைச் சோ்ந்த 14,536 மாணவா்களும், 18,338 மாணவிகளும் என மொத்தம் 32,874 போ் எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்பட்ட நிலையில் தோ்வு எழுதியவா்களில் 13,806 மாணவா்களும், 17,880 மாணவிகளும் என 31,686 போ் தோ்ச்சி பெற்றிருந்தனா்.
தோ்வு முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லக் கூடியது. அத்துடன் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவா்களுக்கும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையடுத்து திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய அசல் சான்றிதழ்கள் அக்டோபா் 14ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியது. கோவை துணி வணிகா் சங்க மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் வரிசையில் நின்று சான்றிதழ்களை பெற்றுச் சென்றனா்.