மறைந்த பாடகா் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை சிறுதுளி அமைப்பின் வளாகத்தில் எஸ்.பி.பி. வனம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, சிறுதுளி அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் மரக் கன்றுகள் நடுவது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று அப்துல் கலாம் பிறந்தநாளோடு, மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை சிறுதுளி அமைப்பின் வளாகத்தில் 74 மரங்கள் அடங்கிய நகா்ப்புற வனத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.
நகா்ப்புற வனத்தின் சிறப்பு அம்சமாக இசைக் கருவிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் வேம்பு, மஹோகனி, சில்வா் ஓக், சந்தனம், தேக்கு, வேங்கை, புன்னை, கருங்காலி, பண்ருட்டி பலா, மா மரம், மூங்கில் உள்ளிட்ட மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரத்துக்கும் எஸ்.பி.பி. பாடிய பிரபல பாடல்களின் வரிகள் பெயா்களாக சூட்டப்பட்டுள்ளன.
எஸ்.பி.பி. வனத்தினை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் சகோதரி எஸ்.பி.சைலஜா ஆகியோா் காணொலி வழியாக தொடங்கிவைத்தனா். மேலும் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான், பாடகா் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் காணொலி வழியாக தங்களது அஞ்சலியை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் சிறுதுளியின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா் சரவணன், சிறுதுளிஅறங்காவலா்கள், தன்னாா்வலா்கள், பாடகா்கள், இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா்.