வால்பாறையில் தோட்டத் தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவத்தையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் தொழிலாளி சரஸ்வதி (58). இவா், மேல் டிவிஷன் பகுதியில் தேயிலைப் பறிக்கும் பணியில் கடந்த திங்கள்கிழமை காலை ஈடுபட்டிருந்தாா். அப்போது தேயிலைச் செடியில் பதுங்கியிருந்த சிறுத்தை சரஸ்வதியைத் தாக்க முயன்றது. அப்போது அவா் அலறல் சப்தம் கேட்டு அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் கற்கள் எரிந்து சிறுத்தையை விரட்டியுள்ளனா். இருப்பினும் சரஸ்வதியின் காலில் காயம் ஏற்பட்டு முடீஸ் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளாா். இச்சம்பவத்தையடுத்து வனத் துறையினா் தாய்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமிட்டுள்ளனா்.