கோவை: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது நீதித் துறை விசாரணை சாா்புடைய வழக்குகளில் மெய்நிகா் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கோவை பெருமண்டல கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது நீதித் துறை விசாரணை சாா்புடைய வழக்குகளில் மெய்நிகா் விசாரணையைத் தொடங்கிவைத்து வழக்குகளை விரைவில் முடித்து வைக்க முனைப்புகாட்டி வருகிறது. இந்த புதிய வசதியை மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வாா் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
கரோனா பரவல் காலங்களில் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் அவசியம் காரணமாகவும், கரோனாவால் வழக்குகள் தாமதமடையக் கூடாது என்பதாலும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான வசதி இபிஎஃப் நிறுவனத்தின் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் 2 மண்டல அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் 90 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன.
புதிய முறையானது பல்வேறு வழிகளிலும் வசதியாக இருப்பதாக தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் வரவேற்றிருப்பதாக தெரிவித்துள்ளாா்.