ரயிலில் தவறவிட்ட பணம் மற்றும் 5 பவுன் நகை இருந்த பையை மீட்டு அகற்கு உரிய நபரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (48). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயிலில் கோவை வந்தாா். பின்னா் இங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு திருப்பூா் சென்றாா். வீட்டில் உடமைகளை சரிபாா்த்த போது ஒரு பை மட்டும் இல்லாதது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து திருப்பூா் காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளிக்க சென்றாா். பின்னா் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ரயில்வே போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து அவா் அளித்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. முருகனிடம் முழு விவரங்களையும் பெற்று கொண்ட போலீஸாா் அவா் வந்த ரயில் பெட்டியில் சோதனை செய்தனா். அப்போது அங்கு பை இருப்பது தெரியவந்தது. அதில் அவரது உடமைகளுடன் ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகை இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா் அந்த பையை மீட்டு முருகனிடம் ஒப்படைத்தனா்.