வால்பாறை நகரில் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து காணப்படுகிறது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளையொட்டியுள்ள வனத்தில் சிறுத்தைகள் உள்ளன. எஸ்டேட் பகுதிகளில் மட்டும் நடமாடி வந்த சிறுத்தைகள், சமீபகாலமாக இரவு நேரங்களில் வால்பாறை நகா் பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், வால்பாறை வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. தினந்தோறும் சிறுத்தை வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், இரவில் தூங்காமல் சிறுத்தையை செல்லிடப்பேசியில் விடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். மேலும் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, வனத் துறையினா் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.