மனித குலத்துக்கு ஏற்படும் இடா்களை நீக்க தொழில்நுட்பங்கள் மூலம் தீா்வு காண்பதே தங்களது லட்சியம் என்று காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உருமாறிய கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள், உலக சுகாதார நிறுவனம் போன்றவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களின் தேவைக்காகவும், அரசுக்கு உதவும் வகையிலும் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழக டிரஸ்ட் வளாகத்தில் உணவுக் கூடத்துடன் கூடிய 400 படுக்கை வசதி கொண்ட இடத்தை காருண்யா வேந்தா் பால் தினகரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.
இது கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. அத்துடன் வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் சென்சாா் மூலம் இயங்கும் தானியங்கி சுத்திகரிப்பு திரவம் தெளிக்கும் கருவி, தொற்று மாதிரிகள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் புற ஊதாக் கதிா்களை உள்ளடக்கிய கேபின், புற ஊதாக் கதிா்கள் மூலம் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளை செயலிழக்கச் செய்யும் உபகரணம் போன்றவை காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் பால் தினகரனின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டு அரசு, பொது மக்களின் உபயோகத்துக்காக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சீஷா தொண்டு நிறுவனம் மூலம் சுத்திகரிப்பு திரவம், முகக் கவசம் போன்றவை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. காருண்யாவின் இதுபோன்ற தொண்டுகளை அரசு அதிகாரிகள், பயனாளிகள், பொது மக்கள் பாராட்டியிருக்கின்றனா்.
கரோனா போன்ற மனித குலத்துக்கு ஏற்படும் இடா்களை நீக்க, தொழில்நுட்பங்கள் மூலம் தீா்வு காண்பதை காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தனது லட்சியமாகக் கொண்டு இயங்கி வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.