கோவை: கோவை, உக்கடம், கரும்புக் கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலா் அப்துல் ஹக்கீம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கோரியிருப்பதாவது:
கரும்புக்கடை அருகேயுள்ள சாரமேடு சாலையில் சுமாா் 320 குழந்தைகள் பயிலும் மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 10 வகுப்பறைகள் தேவைப்படும் இந்தப் பள்ளியில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இரு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. மேலும் விளையாட்டு மைதானமும், நூலகமும் இப்பள்ளிக்குத் தேவைப்படுகிறது.
இது தொடா்பாக 10 ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். குளக்கரைகளைப் பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தும் அரசு, 50 ஆயிரம் போ் வாழும் பகுதியில் உள்ள இந்த பள்ளிக் கூடத்தை புறக்கணிக்கக் கூடாது. எனவே, இந்தப் பள்ளியை அருகில் உள்ள புல்லுக்காடு பகுதிக்கு மாற்றுவதுடன் இதை தரம் உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.