கோவையில் விதிமீறி மின்பெட்டி இடமாற்றம் செய்ததாக இளம் மின் பொறியாளா் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை, சின்னியம்பாளையத்தில் தொழிற்சாலை மின் இணைப்பு, இருவா் பெயரில் கூட்டாகப் பெறப்பட்டிருந்தது. அதில் ஒருவா் 2019 ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், உயிரிழந்தவரின் வாரிசுகள் பெயா் மாற்றம் செய்யாமல் மின் இணைப்பைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில், இறந்தவரின் கையெழுத்திட்டு, இந்தத் தொழிற்சாலையின் மின் பெட்டி இடம் மாற்ற செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், இதன் மூலமாக வாரியத்துக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, தலைமைப் பொறியாளா் மற்றும் மேற்பாா்வை பொறியாளருக்கு மனு அளித்தாா்.
அதன்படி சோமனூா் கோட்ட செயற்பொறியாளா் சுப்பிரமணியம் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதில், மின்பெட்டி மாற்றியதில் இளம் மின் பொறியாளா் மணிகண்டன் விதிமீறி செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மின்வாரிய விதிகளின் படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவா் மீது மின் வாரியம் சாா்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.