மாநகராட்சிக்கு 6 மாதங்களாக வாடகை பாக்கி: 2 கடைகளுக்கு பூட்டு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்கு 6 மாதங்களாக வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு பூட்டி போட்டு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளில் நீண்ட மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, 5 மண்டலங்களிலும் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மேற்கு மண்டலம் ஆரோக்கியசாமி சாலையில் செயல்பட்டு வந்த கடை, தடாகம் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சிக் கூடம் ஆகிய 2 கடைகளும் 6 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், மேற்கு மண்டல உதவி ஆணையா் செந்தில் அரசன் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள் 2 கடைகளுக்கும் செவ்வாய்க்கிழமை பூட்டி போட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.