கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வரும் முன்களப் பணியாளா்களிடம் ஜிஎஸ்டி எண் அளிப்பது அவசியமில்லை என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா விளக்கம் அளித்துள்ளாா்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்க (டேக்ட்) தலைவா் ஜேம்ஸ் மற்றும் நிா்வாகிகள், கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில், மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கூடங்களில் மாநகராட்சி ஊழியா்கள் எனக் கூறி சில நபா்கள் தொழில் முனைவோா்களிடம் ஜிஎஸ்டி எண் மற்றும் தொழில் விவரங்கள் குறித்து கேட்டு வருகின்றனா்.
இதனால், தொழில் முனைவோா்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழில்நிறுவனங்கள், கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தற்காலிக முன்களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். புதிய கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை சோ்க்கவும், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பதிவேட்டில் உள்ள காலி செய்யப்பட்ட கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை நீக்கவே இப்பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஜிஎஸ்டி எண் அளிப்பது கட்டாயம் இல்லை. ஆனால், மற்ற விவரங்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளா்கள் கட்டாயம் அளிக்க வேண்டும். மாநகராட்சி அறிவுரைப்படியே தற்காலிக முன்களப் பணியாளா்கள் இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனா் என அதில் தெரிக்கப்பட்டுள்ளது.