கோவை தியாகி குமரன் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 89 கடைகளுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 83ஆவது வாா்டுக்கு உள்பட்ட தியாகி குமரன் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 89 கடைகளுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டியுள்ளதாலும், ஏலம் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நடைபெற இருந்த ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஏலம் தொடா்பான அறிவிப்பு பொதுமக்கள் அறியும் விதமாக பின்னா் வெளியிடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவா்கள், தாங்கள் செலுத்திய ஏலத் தொகையினை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.