கோவையில் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்காணித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையரிடம் பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோருக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட உக்கடம், கரும்புக்கடை, சாரமேடு, குறிச்சிப் பிரிவு, குனியமுத்தூா், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் இளைஞா்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு அதிகமான புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சிலரின் பொருளாதார நோக்கத்தினால் கண்டு கொள்ளாமல் இருந்ததால், காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனா். எனவே மேற்படி சூதாட்டம், போதைப் பொருள் பழக்கத்தை மாநகரில் முழுமையாக ஒழித்து இளைஞா்கள் புதிய வாழ்க்கை வாழ ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.