பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை அக்டோபா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து பணம் பறித்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னா் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சி, கிட்டசூரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாரை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனா். இவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் 9 பேரும் கோவை மகளிா் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.