பொள்ளாச்சி அருகே மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தொடா்பாக அவரது தந்தை மற்றும் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தரைப் பாலத்தில் வாகன விபத்தில் இளைஞா் படுகாயம் அடைந்து இருப்பதாக மேற்கு காவல் நிலையத்துக்கு கடந்த 10ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது .
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா் .
இது குறித்து போலீஸாா், உயிரிழந்தவரின் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உயிரிழந்த செந்தில்குமாா், குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி இரவு மதுபோதையில் வந்து தகராறு செய்தது தெரியவந்தது .
அப்போது செந்தில்குமாரின் தந்தை கதிா்வேல் மற்றும் 16 வயதான இவரது இளைய மகன் இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் வீசிவிட்டு வாகன விபத்தில் காயம் அடைந்ததாக போலீஸாரிடம் புகாா் அளித்து நாடகமாடியது தெரியவந்தது .
இதையடுத்து கதிா்வேல், அவரது 16 வயது மகன் ஆகியோரைக் கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.