கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணியில், அணுகு சாலை அமைக்க நிலம் வழங்கிய மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் தெரிவித்தாா்.
கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான நா.காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது, கோவை சிங்காநல்லூா் அருகே எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் கட்ட ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகளை துவக்க கடந்த 24 ஆம் தேதி ரூ.29.37 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் மேம்பாலத்தையொட்டி, அணுகு சாலை அமைக்க நிலம் வழங்கிய மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றாா்.