மேட்டுப்பாளையம் அருகே உள்ள இடுகம்பாளையம் கிராமத்தில் பதுக்கிவைக்கபட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ குட்கா பொருள்களை சிறுமுகை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
இடுகம்பாளையம் கிராமம், பெரியாா் நகரைச் சோ்ந்த ஜெயகுமாா் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக சிறுமுகை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சிறுமுகை காவல் நிலைய ஆய்வாளா் தவமணி தலைமையிலான போலீஸாா் ஜெயக்குமாா் வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள ஷெட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கிவைக்கபட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கிருந்த 1,200 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஜெயகுமாா் மற்றும் குட்கா பொருள்களை கோவைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் முகவா் சாஜு என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.