மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சமூக நீதிக் கட்சித் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், கோவை மாநகராட்சியில் உள்ள ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்புப் பணிகள் வழங்கப்பட்டன. அதற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
கரோனா நோய்த்தொற்று அச்சம் இடையே பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஊதியம் வழங்குவது இல்லை. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொறு தேதியில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவா்கள் எப்போது ஊதியம் வரும் என்று காத்துகிடக்கும் அவலம் உள்ளது. எனவே குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.