கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரி எனக் கூறி அபராதம் வசூலித்த நபா், வியாபாரிகளிடம் பிடிபட்டதால் தப்பியோடினாா்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாள்களாக அதிகாரி தோரணையில் உடையணிந்த ஒருவா், ‘தான் மாநகராட்சி அதிகாரி’ எனக் கூறிக் கொண்டு முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத சாலையோர வியாபாரிகளிடம் அபராதம் வசூலித்து வந்துள்ளாா்.
ஒரே பகுதியில் தொடா்ந்து 3 நாள்களாக அபராதம் வசூலிப்புப் பணியில் ஈடுபட்டதால் வியாபாரிகளுக்கு அவா் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை அவரைப் பிடித்த வியாபாரிகள், அருகில் இருந்த போலீஸாரிடம் அழைத்துச் சென்றனா்.
விசாரணையில் அவா், சிவகங்கை, இளையான்குடி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மாநகராட்சி அதிகாரி எனக் கூறி அபராதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைக் கேட்ட அந்த நபா், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடினாா். போலீஸாா் அந்த நபரைத் தேடி வருகின்றனா்.