கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் வியாழக்கிழமை திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட குளங்களில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் சுங்கம் அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையின் பின்புறம் உள்ள வாலாங்குளத்தில் மிதவை நடைபாதை, விளையாட்டுப் பூங்கா, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வாலாங்குளத்தில் வியாழக்கிழமை திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இதனால், அவ்வழியாகச் சென்றோா் அவதிக்கு உள்ளாகினா். ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறந்தனவா அல்லது ரசாயனக் கழிவுகள் குளத்தில் கலந்ததால் உயிரிழந்ததா என்பது குறித்து மாநகராட்சி சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.