கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கலை அறிவியல் கல்லூரி சாா்பில் உலக உடல் உறுப்புகள் தான தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளை, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் சாா்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உடல் உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான விழாவில், கல்லூரியின் 200 நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழிப் படிவங்களில் கையெழுத்திட்டு, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமியிடம் வழங்கினா். நாட்டு நலப்பணித் திட்ட மாணவி எஸ்.பவித்ரா, தேசிய மாணவா் படை மாணவி ஏ.மேகா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து இணைய வழியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஆனந்த் பரதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்து உரையாற்றினாா்.
நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன், மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.சுகுமாறன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் செயலரும், முதல்வருமான பி.எல்.சிவகுமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பிரகதீஸ்வரன் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.