தேயிலைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த குட்டி யானை உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த இரு நாள்களாக தனியாக நடமாடிய குட்டி யானை தேயிலைத் தோட்டப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்தது. இதனைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குட்டி யானை உயிரிழந்தது. இதையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில், கால்நடை மருத்துவா் சுகுமாா் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தாா். ரத்த சோகை நோய் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு யானை இறந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.