ஈமு கோழிப் பண்ணை நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதாகி பிணையில் வந்தவா், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. இவரை, கடந்த 2013 ஆம் ஆண்டு, ஈமு கோழிப்பண்ணை நடத்தி மோசடி செய்த வழக்கில், ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. இதில், கோவிந்தசாமி பிணையில் விடுவிக்கப்பட்டாா். ஆனால், பிணையில் சென்ற அவா் அதன் பின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.
இதனையடுத்து முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், கோவிந்தசாமிக்கு பிடியாணை பிறப்பித்தது. இது குறித்து நீதிமன்ற தலைமை எழுத்தா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோவிந்தசாமியைத் தேடி வருகின்றனா்.