கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய பாதுகாப்புப் படையினா் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனா்.
தேசிய பாதுகாப்புப் படை சாா்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நிகழும் பட்சத்தில் அதை முறியடிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில், செவ்வாய்க்கிழமை இரவு பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகையின் முதன்மைப் பணியாக பயங்கரவாதிகள் குறித்து, ஈஷா மையத்தின் அருகில் உள்ள ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஈஷா யோக மையத்துக்கு போலீஸாா் விரைந்தனா்.
தேசிய பாதுகாப்பு படையினா் ஹெலிகாப்டா் மூலமாக பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். தீயணைப்பு வீரா்கள், மருத்துவக் குழுவினா், வருவாய்த் துறையினா் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனா். போலீஸாா் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் செயல்பாடுகள் மற்றும் அவா்கள் ஒத்திகையில் ஈடுபட்ட கால அவகாசம் கணக்கிடப்பட்டது.