காவல் நிலைய எல்லை பிரச்னை: 11 மணி நேரமாக குளத்தில் கிடந்த சடலத்தை மீட்காமல் காலம் தாழ்த்திய போலீஸாா்

காவல் நிலைய எல்லை பிரச்னை காரணமாக 11 மணி நேரமாக குளத்தில் சடலம் கிடந்தது பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியது.

காவல் நிலைய எல்லை பிரச்னை காரணமாக 11 மணி நேரமாக குளத்தில் சடலம் கிடந்தது பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியது.

கோவை, வடவள்ளி அருகேயுள்ள வீரகேரளம் நாகராஜபுரம் பகுதியில் நரசாம்பதி குளம் உள்ளது. இந்தக் குளத்தின் கரையில் 40 வயது மதிக்கத்தக்க சடலம் முகத்தில் நெகிழி பையால் மூடிய நிலையில் கிடப்பதை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து அவா்கள் கிராம நிா்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா் சடலத்தைப் பாா்வையிட்ட பின்னா் செல்வபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாா் அளித்தாா். புகாரை ஏற்க மறுத்த போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்ட பின்னா் சடலம் உள்ள இடமானது வடவள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்டது எனக் கூறி திரும்பிச் சென்றனா். இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், வடவள்ளி காவல் நிலையத்துக்கும், ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கும் சென்று அங்கும் போலீஸாா் புகாரை ஏற்காததையடுத்து திரும்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த மூன்று காவல் நிலைய போலீஸாா் அங்கு தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் தெரிவித்து பல மணி நேரங்களாகியும் சடலத்தை மீட்காமல் எல்லைப் பிரச்னையில் கவனம் செலுத்திய போலீஸாரின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு கூறியதாவது:

கிராம நிா்வாக அலுவலா், அந்த குளமானது தெலுங்குபாளையம் பிரிவுக்கு உள்பட்டது எனக் கூறியுள்ளாா். ஆனால், தெலுங்குபாளையம் பகுதி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது அல்ல. இதையடுத்து பகல் 12 மணிக்கே மாநகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவா்கள் சம்பவம் நடைபெற்ற இடம் ஆா்எஸ் புரம் காவல் நிலையமா, செல்வபுரம் காவல் நிலையமா எனும் முடிவை எட்ட முடியாமல் காலம் தாழ்த்தி வந்தனா். ஏனென்றால் குளத்தின் ஒரு கரை வீரகேரளம் பகுதியிலும், மறு கரை தெலுங்குபாளையம் பகுதியிலும் வருகிறது. இதனால் சடலம் கிடந்த இடமானது எந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்ற முடிவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னா் வடவள்ளி போலீஸாரை சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டேன். பிரேதப் பரிசோதனைக்கு பின்னா் எந்தக் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதை முடிவு செய்து அதற்கேற்றாா்போல வழக்கை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நிா்வாக காரணங்களால் நிகழ்ந்த இதுபோன்ற தவறுகள் இனி ஏற்படாது எனக் கூறினாா்.

சுமாா் 11 மணி நேரத்துக்குப் பின்னா் மாலை சுமாா் 6.15 மணியளவில் சடலத்தைக் கைப்பற்றிய வடவள்ளி போலீஸாா் அதை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து மாநகர போலீஸாரிடம் கேட்டபோது, இதுபோன்ற காவல் நிலைய எல்லை பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். எதிா்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com