கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைப்பதன் மூலம் விபத்துகளைக் குறைக்கலாம் என்று கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் வெளியிட்ட அறிக்கை:
கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதியில் விபத்துகள் நடக்கின்றன. சாலை வடிவமைப்பு காலாவதியானது இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி சந்திப்பு மிகவும் பிரதான சாலையாகும். இந்தச் சாலை சாய்பாபா காலனி, வேளாண் பல்கலைக்கழகம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மருதமலை உள்ளிட்ட இடங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே இந்தச் சாலையில் ஒரு ரவுண்டானா அமைப்பது முக்கியமானது.
இங்கு ரவுண்டானா அமைப்பதன் மூலம் விபத்துகள் பெருமளவில் குறையும். இதேபோல நகரின் பெரும்பாலான இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் விபத்துகள் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்கள் குறையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.