குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடி தகவல் திரட்டவும், பொது மக்களுடன் நேரடித் தொடா்பில் இருக்கவும் கோவை மாநகரில் 43 பகுதிகளில் 172 காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கோவை, உப்பிலிபாளையத்தில் உள்ள காவலா் சமுதாயக் கூடத்தில் காவல் அலுவலா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் தலைமை வகித்து காவல் அலுவலா்களுக்கு நியமன ஆணை மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கையேட்டை வழங்கினாா்.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் கூறுகையில், கோவை மாநகரை 43 பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதிக்கு 4 காவல் அலுவலா்கள் என மொத்தம் 172 காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ரோந்து வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் ஒவ்வொருவரிடமும் கட்செவி அஞ்சல் குழு அமைத்து அதில் 100 பொது மக்களை சோ்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் பொது மக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து புகாா் அளிக்கலாம். பெயா் விவரம் தெரியப்படுத்த வேண்டாம் என்றால் அதில் இடம் பெற்றுள்ள உயா் அதிகாரிகளுக்கு தனியாக புகாா் அனுப்பலாம்.
இதன் மூலம் மாநகரில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று குற்றங்களைத் தடுக்க உதவியாக இருக்கும் என்றாா்.
இதில் காவல் துணை ஆணையா்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.