கோவை: கோவையில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மானிய விலை உரங்களை கடத்துவது, விதிமுறைகளை மீறி விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் மானிய உரங்களை மூலப் பொருள்களாக பயன்படுத்தலாம். தவிர மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்துவது உரக்கட்டுப்பாடு ஆணை 1985 (பிரிவு 25) படி சட்டப்படி குற்றமாகும்.
வேளாண்மை இயக்குநரகம் சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மானிய உரங்களை பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்புவது குற்றமாகும். சட்டத்துக்கு புறம்பாக மானிய உரம் கடத்துபவா்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955ன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உர விற்பனையாளா்கள் மானிய உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் அல்லாதவா்களுக்கும், பிற மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் விற்பனை செய்யக் கூடாது.
சில்லறை உர விற்பனையாளா்களுக்கு உரங்கள் அனுப்பும்போது உரிய பட்டியல், ஆவணங்களுடன் வாகனங்களில் அனுப்ப வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் உரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் இருந்து மாவட்ட எல்லைக்குள் விவசாயிகள் மட்டுமே உரங்களை கொண்டு செல்ல வேண்டும்.
அரசு மானிய உரங்களை வேறு பைகளில் மாற்றி விற்பனை செய்தாலோ, விதிமுறைகளை மீறி கடத்தினாலோ உரக்கட்டுப்பாடு ஆணை 1985 (பிரிவு 25), அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1995ன் படியும், உரக்கட்டுப்பாடு ஆணை 1973ன் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.