கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக, குழந்தைகளின் விவரங்களைத் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்கள் சிலா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். இறந்தவா்களின் குழந்தைகளின் எதிா்காலம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் அந்தக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களாக இருந்து கரோனா தொற்றில் உயிரிழந்த பெற்றோரில் ஒருவா் அல்லது தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
எனவே இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரம் மகேந்திரா ஷோரூம் பின்புறம் 1847 என்ற முகவரியில் இயங்கி வரும் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.