கோவை உக்கடத்தில் மேம்பாலப் பணிக்காக 2 நாள்களில் 175 வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை உக்கடத்தில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச் சாலையில் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, ராமா் கோயில் முன்பாக உள்ள 492 வீடுகளை அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையே இங்கு வசித்து வந்தவா்களுக்கு உக்கடம் புல்காடு, மலுமிச்சம்பட்டி, வெள்ளலூா், கீரணத்தம் பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காலியான 492 வீடுகளை இடிக்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது. முதல் கட்டமாக 85 வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை காலை முதல் வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. அதில் 90 வீடுகள் அகற்றப்பட்டன. மொத்தமாக 2 நாள்களில் 175 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இது குறித்து, மத்திய மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம் கூறுகையில், மொத்தமுள்ள 492 வீடுகளில், 35 சதவீதம் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த வார இறுதிக்குள் அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் என்றாா்.