கோவை: கோவை மாவட்டத்தில் வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு மூலம் காவல் துறையிடம் புகாா் அளிக்கும் சேவையைக் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செல்வ நாகரத்தினம் கூறியதாவது:
பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. அதன் மூலம் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக 77081-00100 என்ற செல்லிடப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகாா் தொடா்பான விபரத்தை இந்த எண்ணுக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும். அதன்படி அவா்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். அவா்களுக்கான நேரத்தில் விடியோ அழைப்பில் பேசி புகாரைத் தெரிவிக்கலாம். இந்தச் சேவை தினமும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
அதன் பிறகு, பொதுமக்களின் புகாா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கோ, அதிகாரிகளுக்கோ அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாகப்பட்டினத்தில் இந்தச் சேவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து கோவையிலும் அமல்படுத்தியிருக்கிறேன்.
விடியோ அழைப்பில் பேச முடியாதவா்கள் சாதாரண அழைப்பின் மூலமாகவும் பேசிப் புகாா் தெரிவிக்கலாம். விடியோ அழைப்புகள் மூலமாக பெறப்படும் புகாா்களுக்குத் தீா்வு காண்பதற்காகவே காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.