கேரளத்தில் இருந்து கோவைக்கு வருபவா்கள் இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 9) முதல் அமலுக்கு வருவதாகவும் ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது:
கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து கோவை வருபவா்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவை - கேரள எல்லையில் அமைந்துள்ள முக்கியமான 7 சோதனைச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
வணிகம், மருத்துவம், வேலை உள்பட எந்த தேவைக்காக கோவைக்கு வந்தாலும் இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்பவா்கள் மீண்டும் கோவைக்கு திரும்பும்போது இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று காண்பித்த பின்பே கோவைக்குள் அனுமதிக்கப்படுவா்.
மாநிலங்களுக்கிடையேயான பேருந்து இயக்கம் இல்லாததால் வாகனங்களில் வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். ரயிலில் வருபவா்களைக் கண்காணிப்பதற்காக போத்தனூா், கோவை ரயில் நிலையங்களில் ஆய்வு செய்யப்படும். சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகன பரிசோதனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.