கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவையில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள துணிக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.
காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு செய்த ஆணையா் பொது மக்களிடம் முகக் கவசம் அணிவதை தவிா்க்கக் கூடாது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவவும் வலியுறுத்தினாா். கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, முகக் கவசம் அணியாத பேருந்து ஓட்டுநா்கள் 4 பேருக்கு தலா ரூ.500, பொது மக்கள் 15 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தாா். தொடா்ந்து காந்திபுரம் நகா்நல மையத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியினை பாா்வையிட்டாா்.
.