கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளிடம் கரோனா நோய்த் தொற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் கு.ராசாமணி திங்கள்கிழமை விநியோகித்தாா். அப்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணியாமல் வெளியில் வரக் கூடாது என்று அறிவித்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து அனைத்துத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். கோவையில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் பொது மக்களின் கவனமின்மை, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவது போன்ற காரணங்களால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கோவையில் பல்வேறு இடங்களில் முகக் கவசம் இல்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதைப் பாா்க்க முடிகிறது. அதேபோல திருமண நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், துக்க நிகழ்வுகளில் முகக் கவசம் அணியாமல் பங்கேற்கின்றனா். தவிர பொது இடங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாளா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. இதனைத் தவிா்க்க வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் சுற்றுபவா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் காவல் துறையினரால் அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், துணிக் கடைகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தவறினால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள், தனியாா் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.